கண்டி, குண்டசாலை, வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம், உயிரிழந்த பெண்ணின் கணவரின் வீட்டில் இருந்தே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய இளம் பெண் ஆவார்.
கணவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது மகளை அடித்துக் கொலை செய்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எவ்வாறாயினும், தான் இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்ததாகவும், பின்னர் அந்த கயிற்றை அறுத்து அவரது உடலை கட்டிலில் கிடத்தியதாகவும் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
கணவர் தன்னைத் தாக்குவதன் காரணமாக அவர் அடிக்கடி தனது பெற்றோரின் வீட்டிற்கு வருவதாகவும், அவர் விவாகரத்து செய்யத் தயாராகி வந்ததாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை இளைஞனின் வீட்டாரால் பொலிஸாரிடமும் நீதவானிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து உயிரிழந்த தங்கள் மகளினுடையது அல்ல என பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில், உயிரிழந்த பெண்ணின் தரப்பினர் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதன்படி, பெண்ணின் சடலத்தைப் பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
