எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில், அதிக பாதிப்புள்ள 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை உடனடியாக வெளியிடுதல், முப்படைகளின் தலைமையில் விசேட கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுதல், டெங்கு பெருகும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குதல் ஆகிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதேநேரம், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 'சமூக சக்தி' மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன டெங்கு நுளம்புகள் பெருமளவில் பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான டெங்கு பரவல் நிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
