அரச பணியாளர்களுக்கு தவணைக்கட்டண முறையில் அரிசி வழங்குவது தொடர்பாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கூறிய கருத்துக்கு விவசாய அமைப்புகள் உட்பட பல தரப்பினர் கடும் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க"நாங்கள் அரச பணியாளர்களுக்கு சற்று சலுகை விலையில் 20 கிலோ அரிசியை (10 கிலோ எடையுள்ள இரண்டு பக்கற்றுகள் - சிவப்பு அரிசி மற்றும் நாடு அரிசி) தவணைக்கட்டண முறையில் வழங்கவுள்ளோம். அதை அவர்கள் சதொச அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிட்டார்.
இந்தநிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ரஜரட்ட கூட்டு விவசாய அமைப்பு உள்ளிட்ட தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நல்ல வீடுகள் கட்டவும், வாகனங்கள் வாங்கவும் எதிர்பார்த்து இந்த அரசாங்கத்துக்கு அஞ்சல் மூலம் வாக்களித்த அரச , இன்று 20 கிலோ அரிசியைக் கூட தவணை முறையில் வாங்கும் நிலைக்குத் தள்ளி அரசாங்கம் அவர்களை இழிவுபடுத்தியுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் அரிசி போன்ற உணவுப்பயிர் எனப்படும் உன்னத உணவை, லீசிங் அல்லது தவணை முறையில் வழங்கிய முதல் வர்த்தக அமைச்சர் என்ற பழிச்சொல்லுக்கு வசந்த சமரசிங்க ஆளாகியுள்ளார் .
அரச பணியாளர்களின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியமைக்கு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க உடனடியாக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
