நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவற்றுக்குத் தங்களது நெல்லை ஒப்படைக்காத விவசாயிகளும் தவறிழைத்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது நெல்லை விற்க முடியாமல் உள்ளதாகவும், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளைத் திறக்குமாறும் ஒரு குழுவினர் கூச்சலிட்டு வருகின்றனர். களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருந்த போது ஏன் அவர்கள் நெல்லைக் கொண்டு வந்து ஒப்படைக்கவில்லை என்றுதான் எமக்குக் கேட்கத் தோன்றுகின்றது. எனினும், தற்போது பெரும்பாலான நெல் விவசாயிகளிடம் இல்லை. ஒருவேளை விவசாயிகள் நெல்லைத் தங்களிடமே வைத்திருந்தார்கள் என்றால், அவர்களும் தவறிழைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டிருந்த போது அவற்றை ஒப்படைத்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் அவர்கள் நெல்லைச் சேர்த்து வைத்திருந்தார்கள்? தங்களுக்கு ஏதேனும் இலாபம் கிடைக்கும் என்ற நோக்கில்தானே அவ்வாறு வைத்திருந்தார்கள்? மறுபுறம், விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து சேர்த்து வைத்துள்ள இடைத்தரகர்கள் குழுவொன்றும் இங்கு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து, பின்னர் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக நெல்லைச் சேமித்து வைத்துள்ள குழுக்கள் இருக்கக்கூடும். அவர்கள்தான் தற்போது பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனினும், அந்தப் பிரச்சினைக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும், அது குறித்து நாம் தனியாகக் கலந்துரையாடுவோம்." என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
.jpeg)