அரச அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேதன முரண்பாடுகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கும், அரச சேவையை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மறுசீரமைப்பதற்கும் புதிய "வேதன மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு" ஒன்றினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தை உள்ளடக்கிய 2494ஃ05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2026 ஜூன் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவின் தலைவராக தெல்கே அஸோக பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் செயலாளராக டி.எம்.சீ.நாலக்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள கட்டளையின்படி, பல ஆண்டுகளாக நிலவி வரும் வேதன மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளினால் பகிரங்க நிதிசார் முகாமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, அவற்றுக்கு நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பித்தல்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை (SC/FR 23/2014) மற்றும் அமைச்சரவைத் தீர்மானங்களைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த அரச சேவைக்கான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு முன்மொழிவுகளை வழங்குதல்.
திறமையான நபர்களை அரச சேவைக்கு ஈர்க்கும் வகையிலும், அவர்கள் அரச சேவையை விட்டு விலகிச் செல்வதைத் தடுக்கும் வகையிலும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப ஊக்குவிப்புகளைப் பரிந்துரைத்தல்.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, இலங்கையின் அரச சேவையை எதிர்காலத்திற்கு உகந்த, பிரசைகள் மையப்படுத்தப்பட்ட மற்றும் பொறுப்புணர்வுடைய சேவையாக மாற்றுவதற்கான மூலோபாயங்களை வகுத்தல் போன்ற பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் ஒரு வருடத்திற்குள் (01 வருடம்) நிறைவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குத் தேவையான சகல உதவிகளையும், தகவல்களையும் வழங்க வேண்டும் என அனைத்து அரச அலுவலர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
எவரேனும் ஓர் அரச அலுவலரோ, அமைச்சின் அதிகாரியோ அல்லது கூட்டுத்தாபன அதிகாரியோ ஆணைக்குழுவின் பணிகளை நிறைவேற்றத் தாமதித்தால் அல்லது தவறினால், அது குறித்து உடனடியாகத் தன்னிடம் அறிக்கையிடுமாறு ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
.jpeg)