நெல்லுக்கான உத்தரவாத விலையை தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றாடல், விவசாயம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விதை நெல், உரம், விவசாய இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய உள்ளீட்டுச் செலவுகளை இந்த விலைச் சூத்திரம் கணக்கில் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் வருடாந்த உரத் தேவை அரசாங்க மற்றும் தனியார் துறை கொள்வனவுகள் மூலம் எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறித்த விபரங்களையும் அவர் கோரியுள்ளார்.
உலகளாவிய மோதல்கள் உர விலையில் ஏற்படுத்தும் தாக்கத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல்களுக்கு முன்னரும் பின்னருமான உர விலைகளை ஒப்பிட்டுப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், ஹோர்முஸ் நீரிணை ஊடாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உரங்களின் மீதான தாக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் உரங்களுக்குப் பயன்படுத்தப்படும் தரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒரு ஹெக்டேயருக்கு ஒதுக்கப்படும் உரத்தின் அளவு ஆகியவற்றை வெளிப்படுத்துமாறு அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளின் கூற்றுப்படி, தற்போது ஒரு ஹெக்டேயருக்கு ஒதுக்கப்படும் 300 கிலோகிராம் உரம் போதுமானதாக இல்லை எனவும், அதனை 400 கிலோகிராமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒரு ஹெக்டேயருக்கு வழங்கப்படும் 50 கிலோகிராம் இயற்கை உரம் 150 கிலோகிராமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpeg)