திருகோணமலையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
நிலாவெளி காவல் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டைப் பகுதியில் கடையில் இருந்த பெண் ஒருவரின் சங்கிலியே இவ்வாறு பறிகொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (06-06-2026) மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் குறித்த கடையைத் தாண்டிச் சென்று பின்னர் மீண்டும் அக்கடைக்கு முன் நிறுத்தி ஒருவர் கடையில் பொருள் வாங்குவது போலப் பாசாங்கு செய்துள்ளனர்.
இதையடுத்து கடையில் இருந்த 69 வயதான வயோதிபப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நகர் பகுதியை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
