தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த இடத்தை சரியாக அறிந்து கூறியவர் சுரேஷ் சாலே, அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுரேஷ் சாலேவின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. தனது உயிருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவே அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
அடிப்படை வசதிகள் கூட அவருக்குச் செய்துக் கொடுக்கப்படவில்லை. அவரைப் பார்ப்பதற்குச் சென்றால் அங்கு 20 முதல் 25 வரையிலான பாதுகாப்பு அதிகாரிகள் சூழ்ந்து நிற்கின்றனர்.
அவர் அடைக்கப்பட்டுள்ள சிறிய அறையில் ஏழு சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு அவர் உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்களிலாவது, சர்வதேச விசாரணைகளிலாவது சுரேஷ் சாலேவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறிருக்கையில், இந்த அரசாங்கம் அவரை அரசியல் பழிவாங்கலுக்காகவே கைது செய்து வைத்துள்ளது.
அரசாங்கம் தமது தோல்விகளை மூடிமறைக்கவே சுரேஷ் சாலேவின் உயிரைப் பலிகொடுக்க முயற்சிக்கிறது. சுரேஷ் சாலேவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்நாட்டின் மீது அன்பு கொண்ட தேசப்பற்றுள்ள சக்திகள் நிச்சயமாக வீதிக்கு இறங்குவார்கள். அவ்வாறு நடந்தால், அரசாங்கத் தலைவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமல் போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
